தமிழகத்தில் கட்டுமான மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க 12 புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்டுமான மணல் தட்டுப்பாட்டை போக்க காவிரி பாசன மாவட்டங்களில் புதிய மணல் குவாரிகளை திறப்பது மட்டுமே தீர்வல்ல; வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட மாற்று வழிகளும் உள்ளன.

மேலும், செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் சட்டவிரோத மணல் அள்ளலை தடுக்க முடியும் என்ற அரசின் வாதம் நடைமுறையில் சாத்தியமற்றது. தமிழக அரசின் புள்ளிவிவரங்களின்படி தினமும் சுமார் 60 ஆயிரம் லாரி மணல் தேவைப்படுகிறது, புதிய குவாரிகள் திறக்கப்பட்டால் ஆண்டுக்கு 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் நிலை உருவாகும்.

2023-ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த அளவை விட 36 மடங்குக்கும் அதிகமாக மணல் எடுக்கப்படும் அபாயம் உள்ளது. இது காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளின் சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்து, காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும்.

மேலும், மேகதாது அணை மூலம் காவிரி நீர் வரத்தை குறைக்க கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், மணல் குவாரிகள் மூலம் அதே மாவட்டங்களை தமிழக அரசே பாதிக்கக் கூடாது.

எனவே, 12 புதிய மணல் குவாரிகள் திறக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அதேசமயம் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குறைந்தது 5 கி.மீ. இடைவெளிக்கு ஒரு தடுப்பணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version