தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. அன்று திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டையில் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த திமுக-வினரை தாக்கி, மேசை நாற்காலிகளை அகற்றி தகராறில் ஈடுபட்டதாக, தவெக-வைச் சேர்ந்த ரதி, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக ராயப்பேட்டை காவல் நிலையத்தில், சென்னை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலரின் மகன் கே.வி.மோகன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் காவல்துறை தங்களை கைது செய்யக்கூடும் எனக் கூறி முன் ஜாமீன் வழங்க வேண்டுமென ரதி, பாஸ்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி பி.தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி, ஏற்கனவே ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் திமுகவினருக்கு எதிராக மனுதாரர் புகார் அளித்ததால், அதற்கு பதிலாக பொய்யான புகாரை மனுதாரர்களுக்கு எதிராக அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்குகள் ஏதும் இல்லை என்பதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
மனுதாரர்களுக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை நடைபெறுவருவதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது எனக் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பாலாஜி எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் புகார் அளித்ததால் அவர்களுக்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது; சட்டமன்ற தேர்தல் பணி தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது; மனுதாரர்களுக்கு எதிராக வேறு வழக்கும் இல்லை எனக் கூறி மனுதாரர்களுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 10 ரூபாய்கக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினும் செலுத்த வேண்டும் என்றும், 4 வாரங்கள் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; நீதிமன்றத்தின் அனுமதி இன்றி நாட்டை விட்டு வெளியேறக்கூட்டது என்ற நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.
