உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்திற்குள் ஆபாசமாக உடை அணிந்து சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு முற்றிலும் தடை விதிப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் தசரா குழுக்களுக்கு கோவில் செயல் அலுவலர் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தசரா குழுக்களில் சினிமா கலைஞர்களை கொண்டு, சினிமா பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்திற்குள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆபாச நடனம் ஆடுவதற்கோ அல்லது அநாகரிகமான ஆடைகளை அணிந்து வரும் நடனக் கலைஞர்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைவதற்கோ அனுமதி இல்லை.

கடந்த ஆண்டு தசரா திருவிழா ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட படி, இந்த ஆண்டும் கோவில் வளாகம் மற்றும் பொது இடங்களில் தசரா குழுக்கள் சாதி ரீதியான அடையாளங்கள், இரும்பாலான ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்தம் உள்ள பாடல்களை ஒலிப்பதோ, மது மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதோ கூடாது.
கோவில் வளாகத்திற்குள் நையாண்டி மேளங்கள், ராஜ மேளங்கள் கொண்டு, முறையாக விரதமிருந்து காப்புக்கட்டி வேடம் அணியும் பக்தர்கள் தங்களின் பாரம்பரிய தசரா கிராமிய நடனங்களை ஆட மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேளம் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் அம்பாளுக்குரிய பாரம்பரியமாக வாசிக்கப்படும் வாத்தியங்களை மட்டுமே இசைக்க வேண்டும். ‘பேண்ட் செட்’ மற்றும் இதர நவீன இசைக்கருவிகளைக் கொண்டு கோவில் வளாகத்தில் சினிமா பாடல்களை வாசிப்பதற்கும், அதற்கு நடனமாடுவதற்கும் அனுமதி கிடையாது. மீறிச் சினிமா பாடல்களோ அல்லது வேறு ஏதேனும் அநாகரிகமான இசையோ இசைக்கப்பட்டால், போலீசார் மூலம் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விதிமுறைகளை மீறி ஆபாசமான அல்லது அநாகரிகமான நடனங்கள் மற்றும் இதர விதிமீறல்கள் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட நடனக் கலைஞர் (நடிகர், நடிகை), நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மற்றும் விண்ணப்பதாரர் ஆகியோருக்கு எதிராகக் காவல் துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கோவிலின் விதிமுறைகளை மீறும் தசரா குழுக்களின் உத்தியோகபூர்வ பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும். எனவே, ஆபாச நடனங்களைத் தவிர்த்துவிட்டு, அம்பாளுக்கு உகந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசையை மட்டுமே நடத்தி முத்தாரம்மன் கோவிலுக்கும், அதன் நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கோவில் செயல் அலுவலர் தனது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version