பாஜக அரசின் இந்தித் திணிப்பு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “பாஜக அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!

இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பாஜக!

‘மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு!

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர்.

வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரைத் திணித்து விட்டனர்.

குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ ஆகிவிட்டது.

மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.

கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!

தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version