பரந்தூர் விமான நிலையம் கட்டுமான பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11:30 மணியளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு கிராமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அனுமதியை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு இட அனுமதியும் கிடைத்துள்ள நிலையில், புதிய விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்டுமான பணிகள் எப்போது மேற்கொள்ளப்படும் அதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதா தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து 2026-ம் ஆண்டு தொடங்கி 2028-ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version