தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இன்றும் தனது அரசியல் பயணத்தில் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அந்தவகையில், சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தவெக அரசு அமைவதற்கு ஐயூஎம்எல்-இன் 2 எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே நிபந்தனையற்ற ஆதரவு கடிதம் வழங்கியிருந்தனர். இந்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தனது புதிய பணிக்காக வாழ்த்துப் பெறவும் இந்தச் சந்திப்பு அமைந்தது.
பதவியேற்ற கையோடு, நேற்று முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துக் கட்டித்தழுவி வாழ்த்துப் பெற்றார். இது தமிழக அரசியலில் பல தசாப்தங்களுக்குப் பிறகு காணப்படும் ஒரு ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இவரை தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவர்களது இல்லத்திற்கே சென்று விஜய் சந்தித்தார்.
இதேபோல், இன்றும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார் (காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்). இதனை தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறவுள்ளார்.
