சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில், நிலத்தை அளவீடு செய்யச் சென்றபோது பெண் ஒருவரை தாக்கிய வட்டார வளர்ச்சி அலுவலரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பூசாரி தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராணி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் நிலத்தை அளக்க வந்ததை செல்வராணி தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, செல்வராணியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரைப் பெண் என்றும் பாராமல் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதில் அதிகாரியும் நிலை தடுமாறி கீழே விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், தனது தாயாரைக் தாக்க முயன்றதைத் தடுக்கச் சென்ற செல்வராணியின் மகனையும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.
அதிகாரியின் இந்த அத்துமீறல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், கொளத்தூர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
