திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விசாரணையை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கைகாட்டி புதூரை சேர்ந்த அண்ணாதுரை என்ற தொழிலதிபரின் மகளான ரிதன்யா, கடந்த ஏப்ரல் மாதம் அதேப் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 28-ம் தேதி காருக்குள் விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்-ல் அழுதபடி தனது மரணத்திற்கு காரணம் தனது கணவர், மாமனார், மாமியார் என கண்ணீர் மல்க ஆடியோவை அனுப்பியிருந்தார்.

அதனடிப்படையில் போலீசார் இதன்யாவின் கணவர், மாமனார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாத்துரை மற்றும் அவருடைய தரப்பு வக்கீல் மோகன்குமார் ஆகியோர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அதில் கவின்குமார், ஈஸ்வர மூர்த்தி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவித்து இருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குணசேகரன் இந்த மனுக்களின் விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி, இந்த மனு நீதிபதி குணசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி தரப்பில் இடையீட்டு மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கேட்டதால், விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version