தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 10 தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியை எதிர்பார்த்து ஒட்டுமொத்த வாக்காளர்களும் அரசியல் கட்சிகளும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு தனது இறுதிக்கட்ட ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தமிழகத்திற்கான தேர்தல் அட்டவணை வெளியாகலாம் எனத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் பயணத் திட்டத்தின்படி, நாளை மறுநாள் (மார்ச் 5) கேரளா செல்லும் ஆய்வுக் குழுவினர், அங்கு மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விரிவான ஆலோசனைகளை நடத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா மற்றும் மேற்கு வங்கப் பயணத்திற்குப் பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, தேர்தல் ஆணையம் அனைத்துப் மாநிலங்களிலும் தனது கள ஆய்வுகளை முடித்த சில நாட்களிலேயே டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துத் தேர்தல் தேதியை அறிவிக்கும். அந்த வகையில், மார்ச் 10-ம் தேதி இரவு அல்லது மார்ச் 11-ம் தேதிகளில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பதால், தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் காணப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version