தூய்மை பணியாளர்கள் இனி ‘விசில்’ பயன்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை திடீர் தடை விதித்துள்ளது. இதன் பின்னணியில் பேசப்படும் தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் குப்பையை சேகரிக்கின்றனர். இதில் பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகளில் வீடுகளுக்கே சென்று குப்பை சேகரிக்கும் பணியை தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை போன்ற மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் குப்பைகளை சேகரிக்கும் பணி கையாளப்பட்டு வருகிறது. இதில் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணிகளை செய்யும் போது தூய்மை பணியாளர்கள் தாங்கள் வந்திருப்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விசில் பயன்படுத்துவர். தூய்மை பணியாளர்களின் விசில் சத்தம் கேட்டு பொது மக்கள் குப்பையை எடுத்து வந்து குப்பை வண்டியில் கொட்டுவது வழக்கம். இந்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தவெகவுக்கு தேர்தல் ஆணையத்தால் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டு, வரும் சட்டசபை தேர்தலில் விசில் சின்னத்தில் தவெக தேர்தலை சந்திக்க இருக்கிறது. எனவே, விசில் பயன்படுத்துவதை தவிர்க்கும் படி நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக தூய்மை பணியாளர்கள் இனி விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கிய பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அரசு பஸ்களில் கூட இனி நடத்துநர்கள் விசில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் சிலர், “தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் ‘விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கி பயன்படுத்துவது’ என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது தான். இதற்காக தூய்மை விழிப்புணர்வு பாடல் உருவாக்கப்பட்டு, தெருக்களில் வலம் வரும் குப்பை வண்டியில் ஒலிபரப்பப்பட்டது. இதை சில உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. சில இடங்களில் விசில் பயன்படுத்துகின்றனர். விசிலை விட ஒலிபெருக்கி வாயிலாக மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்தல் குறித்து தூய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். எனவே தான் விசிலை தவிர்த்து ஒலிபெருக்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என கூறினர்.
இருப்பினும் அரசினுடைய இந்த அணுகுமுறை என்பது, தமிழக வெற்றிக்கழகத்தை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டதோ? இத்தனை நாட்களாக விசில் பயன்படுத்தும்போது இந்த விழிப்புணர்வு பாடல் பற்றி தோன்றவில்லையோ? விஜய்யின் சின்னம் மக்கள் மத்தியில் போய் சேர்ந்துவிடக்கூடாது என திமுக நினைக்கிறதோ? என்ற சந்தேகங்களை மக்கள் மத்தியில் கிளப்ப, மக்களும் தங்களுக்குள் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். மறுபக்கம் அரசின் நடவடிக்கைக்கு போட்டியாக சில பகுதிகளில் தவெகவினர் மக்களுக்கே நேரடியாக விசிலை விநியோகித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பேச்சு என்பது, சென்னையில் சமீபத்தில் திமுகவினரால் தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
