வேளச்சேரி பேருந்து நிலையத்தில் தவறவிடப்பட்ட ஒன்றேகால் சவரன் தங்க பிரேஸ்லெட்டை, நேர்மையுடன் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த துரை (46) என்பவரை காவல்துறையினர் பாராட்டி கௌரவித்துள்ளனர்.
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெனி பிரீத்தி என்பவர் பேருந்து நிலையத்தில் நின்றபோது தனது தங்க நகையைத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நகையைக் கண்டெடுத்த துரை, எவ்விதத் தயக்கமும் இன்றி வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, காவலர்கள் அந்த நகையை உரிய உரிமையாளரான ஜெனி பிரீத்தியிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
தன்னலம் கருதாமல் இத்தகைய நேர்மையான செயலைச் செய்த துரையின் செயலைப் பாராட்டும் வகையில், வேளச்சேரி காவல்துறையினர் அவரை நேரில் அழைத்தனர். அங்கு அவருக்கு வாட்ச் பரிசளித்து, காவல்துறையினர் தங்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இக்காலகட்டத்தில் இத்தகைய நேர்மையான செயல் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
