தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட சிறப்பு நிலவரக் குழுவுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்களான கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத பின்னடைவு, 15 அமைச்சர்களின் தோல்வி மற்றும் கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றுக்கான உண்மையான காரணங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
தோல்விக்கான கள நிலவரங்களையும், அடிமட்டத் தொண்டர்களின் கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிய, இந்த 36 பேர் கொண்ட குழுவினர் விரைவில் மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து இக்குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் தோல்விக்குத் தானே முழுப் பொறுப்பேற்பதாக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்தத் தோல்வியில் இருந்து மீண்டு வந்து கட்சியை மீண்டும் பலப்படுத்தவும், அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிட்டுச் சீரமைக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்வுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
