தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு எதிராகப் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தபோது அதை யாரும் வழிமொழியவில்லை என்றும், இது அவை மரபுகளை மீறிய செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், அரசின் தீர்மானம் என்பதால் வழிமொழியத் தேவையில்லை என விளக்கம் அளித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த இபிஎஸ் பேசியதாவது, “தூய்மையான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் ரகசியமாகச் சந்திப்பது ஏன்? இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களும் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் வாக்களித்த நிலையில், ஒரு பிரிவினருக்கு மட்டும் முதலமைச்சர் ஆதரவளிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறப்படுவதாகத் தகவல் வருகிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.”

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 66% வாக்காளர்கள் தவெகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதை நினைவுபடுத்தினார். 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டு வந்து அதிமுக பொற்கால ஆட்சியை வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவின் 47 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராகவே வாக்களிப்போம் என்று அதிரடியாக அறிவித்தார். கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு, ஆனால் அதைச் சாதகமாக்கி ஒரு பிரிவுக்கு மட்டும் முதல்வர் ஆதரவளிப்பது ஏற்புடையதல்ல எனத் தனது உரையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பதிவு செய்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version