தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பள்ளிகள் திறந்தாலும் சம வேலைக்கு சம ஊதியத்திற்கான போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2006 ஜூன் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370 ரூபாய் அடிப்படை ஊதியமும், அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 என்ற அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேறுபாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், 311 வது தேர்தல் வாக்குறுதியாக, ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல், மனித சங்கிலி, கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் என இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 10வது நாளான நேற்று, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு சிவானந்தா சாலையில் 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வழங்கிய மதிய சாப்பாட்டை சாப்பிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் பேசியபோது, 2009 ஆம் ஆண்டுக்கு பின்பு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். யாருடைய தூண்டுதலாலும் இந்தப் போராட்டம் நடைபெறவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தான் கேட்கிறோம். போராட்டம் முடிவுக்கு கொண்டு வரக்கூடாது என நினைக்கிறார்களா என தெரியவில்லை. முதலமைச்சரும், துணை முதலமைச்சர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களை 10 நாட்கள் வரை போராட வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. ஊதிய முரண்பாடுகளை கலைந்தால் மட்டுமே பள்ளிக்கு செல்வோம். இல்லையென்றால் எங்களின் போராட்டம், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும். இன்று முதல் போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், மாணவர்கள் நலன் கருதி அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version