தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பள்ளிகள் திறந்தாலும் சம வேலைக்கு சம ஊதியத்திற்கான போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2006 ஜூன் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370 ரூபாய் அடிப்படை ஊதியமும், அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 என்ற அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேறுபாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், 311 வது தேர்தல் வாக்குறுதியாக, ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல், மனித சங்கிலி, கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் என இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் 10வது நாளான நேற்று, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு சிவானந்தா சாலையில் 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வழங்கிய மதிய சாப்பாட்டை சாப்பிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
