நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காவிரி தனபாலன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
டெல்லியில் 29ஆம் தேதி நடக்க உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்திற்கு எதிரான நிகழ்வு நடக்க இருக்கிறது என அச்சமாக உள்ளது.
தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் காவந்து அரசு உள்ளதால் இந்த கூட்டம் கர்நாடகத்துக்கு மட்டுமே ஆதரவான சூழ்நிலையாக உள்ளது.
காவிரி ஆணைய கூட்டத்தை கூட்டி முடிவெடுப்பது என்பது தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனைக் கருத்தில் கொண்டு நீர்வளத்துறை இந்த கூட்டத்தை ஒத்தி வைத்து தேர்தலுக்குப் பின் நிரந்தர அரசு அமைந்த உடன் கூட்டத்தை நடத்த வேண்டும்.
காவிரி ஆணையக் கூட்டத்தினை ஒத்தி வைக்காத பட்சத்தில் வரும் 29ம் தேதி நாகப்பட்டினத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காவிரி தனபாலன் தெரிவித்தார்.

