விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று (ஏப். 19) மாலை பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. விடுமுறை நாளான நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென பட்டாசு வெடித்துச் சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. சிறிது நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர், பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்தினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பஞ்சவர்ணம் என்பவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, வெடிவிபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. விதிகளை மீறி ஒரே நேரத்தில் அதிக வெடிகளை தயாரிக்க முயன்றதால் வெடிவிபத்து. பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுக்காமல் அதிக வெடிகளை தயாரிக்க முயற்சி. அதிக வெடி பொருட்களை மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாக கலந்ததால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பெண்கள் உள்பட 24 பேர் உயிரிழப்பு; 20 உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவடைந்தது. 4 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு பணிக்காக நெல்லை, மதுரையில் இருந்து 14 சிறப்பு மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. தலா ரூ.5.5 லட்சம் வழங்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆலையின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
