மே 2026-ல், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கமே பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது.
“சி. ஜோசப் விஜய் என்னும் நான்…” என்று கம்பீரமாகத் தொடங்கி, தமிழகத்தின் 22-வது முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் நடிகர் விஜய்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் முடிந்த அடுத்த சில நொடிகளில், மேடையை விட்டு நகர்ந்த விஜய் நேராகத் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை நோக்கித் திரும்பினார். ஒரு எளிய, ஆனால் ஆழமான கேள்வியை அவர் கேட்டார்: “அப்பா, உங்க கனவை நான் கடைசியில நெஜமாக்கிட்டேனா?” அதற்கு அவரது தந்தை கண்கள் கலங்க, தலையசைத்து “ஆம்” என்று பதிலளித்ததாக விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அண்மையில் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த ஒற்றைத் தலையசைப்புடன், கடந்த இரண்டு தசாப்தங்களாக அந்த குடும்பத்திற்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு நீண்ட அரசியல் தேடல் மற்றும் கனவின் வட்டம் முழுமையடைந்தது.
2009-ல் விதைக்கப்பட்ட விதை
தமிழக மக்கள் விஜய் எனும் ஆளுமையை வெறும் மக்கள் இயக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்க்கான அரசியல் பாதையைத் திட்டமிடத் தொடங்கிவிட்டார். 2009-ஆம் ஆண்டு ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஒரு சமூக நல அமைப்பாகத் தொடங்கப்பட்டபோதே, இதன் இறுதி இலக்கு அரசியல் அதிகாரம் தான் என்பதை எஸ்.ஏ.சி உணர்ந்திருந்தார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இதனை நினைவு கூர்கிறார்: “அரசியலில் எத்தனையோ பேர் நுழைந்து தோற்றுப் போயிருக்கிறார்கள். முதலமைச்சர் நாற்காலியை இலக்காகக் கொண்டு, அதை அடைய முடியாமல் போனவர்களையே நாங்கள் அதிகம் பார்த்திருக்கிறோம். அதனால் ஆரம்பத்தில் எங்களுக்குள் ஒரு பயம் இருந்தது உண்மைதான். ஆனால், தமிழகம் முழுவதும் விஜய்க்கு இருந்த பிரம்மாண்டமான ரசிகர் பட்டாளத்தையும், மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கையும் பார்த்த பிறகு, அவனால் நிச்சயமாக இந்த இலக்கை எட்ட முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை எங்களுக்குள் பிறந்தது“ என்கிறார்.
குடும்பத்திற்குள் வெடித்த மோதலும், சரித்திர கூட்டணியும்
இந்த 17 ஆண்டுகாலப் பயணம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. 2020-ஆம் ஆண்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே அரசியல் ரீதியாகப் பெரும் விரிசல் ஏற்பட்டது. விஜய்க்குத் தெரியாமல், அவரது தந்தை ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்ய முயன்றார். அதில் தனக்கு பொதுச் செயலாளர் பதவியையும், ஷோபாவிற்குப் பொருளாளர் பதவியையும் ஒதுக்கினார்.
இதனால் அதிருப்தியடைந்த விஜய், அந்த முயற்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து, தன் தந்தை மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுத்தார். குடும்பத்திற்குள் ஏற்பட்ட இந்த விரிசல், பின்னாட்களில் சுமுகமாகச் சரிசெய்யப்பட்டது. 2024-ல் விஜய் அதிகாரப்பூர்வமாக ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கியபோது, குடும்பம் முழுமையாக அவர் பின்னால் நின்றது.

அதன் விளைவாக, 2026 ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், தவெக தனித்து களம் கண்டு 108 இடங்களைக் கைப்பற்றி அசாத்திய சாதனை படைத்தது. பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், மற்றும் விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு, சுமார் 60 ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் தனிப்பெரும் ஆட்சிக்கான முற்றுப்புள்ளியை விஜய் வைத்துள்ளார்.
விமர்சனங்களை வென்ற மௌனம்
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வரும் எவரும் எதிர்கொள்ளும் முதல் ஆயுதம் கடுமையான விமர்சனங்கள் தான். விஜய்யும் அதற்கு விதிவிலக்கல்ல. “அரசியலில் அவர் சந்தித்த விமர்சனங்களைப் பார்த்து எங்கள் குடும்பமே மிகவும் வேதனைப்பட்டது. ஆனால், அவர் முதன்முதலில் சினிமாவுக்குள் நுழைந்தபோதும் இதேபோன்ற கடுமையான உருவக் கேலிகளையும், விமர்சனங்களையும் தான் சந்தித்தார். அப்போது எப்படி மௌனமாக இருந்து தன் உழைப்பால் சாதித்தாரோ, அதேபோல்தான் அரசியலிலும் விமர்சனங்களை அமைதியாக எதிர்கொண்டு, அதைத் நேர்மறையான ஆற்றலாக மாற்றி இன்று இந்த அரியணையை எட்டியுள்ளார்” என்று ஷோபா சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடிப்பையும் அரசியலையும் எப்படி ஒன்றாகக் கையாள்வார் என்ற கேள்விக்கு, “விஜய் எப்போதுமே ஒரு துறையில் இருந்தால் அதில் மட்டுமே முழுமையாக இருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். அதனால்தான், ஆரம்பத்திலிருந்தே சினிமா அல்லது அரசியல் ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்” என்று அவரது சினிமாப் பயணத்தின் முற்றுப்புள்ளியையும், அரசியல் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தந்தை கண்ட 17 ஆண்டு காலக் கனவை மகன் நனவாக்கிவிட்டாலும், திரையுலகின் ‘தளபதி’யாக இருந்த விஜய், தமிழகத்தின் ‘முதலமைச்சராக’ மக்களின் அன்றாடப் பிரச்சினைகளையும், அரசியல் சவால்களையும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்தே இந்த மாபெரும் மாற்றத்தின் முழுமையான வெற்றி அடங்கியுள்ளது.
– பா. முகிலன்
