சென்னையில் தங்கம் விலை இன்று (ஏப்ரல் 3)  அதிரடியாக உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.13,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருவதால் நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகளை அதிகரித்துள்ளது.

இருப்பினும், நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்தநிலையில், இன்றும் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்வு செய்து வருகின்றனர். உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் உள்நாட்டில் தங்கம் விலை உயர்வதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர்களின் கணிப்புப்படி, சர்வதேச சந்தையில் நிலவும் இந்த சூழல் தொடர்ந்தால், வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கின்றனர். திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சேமிப்பு மற்றும் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள், இந்த விலை உயர்வால் தற்போது திகைப்பில் உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version