தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்களின் கீழ், மே மாதத்திற்கான உதவித்தொகை ரூ.1,000 தற்போது மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசின் முக்கியத் திட்டங்கள் தங்குதடையின்றித் தொடரும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், இந்த நிதி விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “மக்களுக்கான பயனுள்ள திட்டங்கள், ஆட்சி மாற்றத்தைக் கடந்து தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என உறுதியளித்திருந்தார். அதன்படி, உயர்கல்வி கற்கும் மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவும் வகையில் இந்த மாதம் வழங்கப்பட வேண்டிய ரூ.1,000 உதவித்தொகை உரிய நேரத்தில் மாணவர்களின் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேபோல், தமிழகத்தின் 1.31 கோடி இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் மே மாதத்திற்கான ‘மகளிர் உரிமைத்தொகை’ நாளை (மே 15) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் நிதித் துறையின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளநிலையில், திட்டங்களுக்கான நிதி முறையாக விடுவிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
