16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய நெருங்கிய உறவினரான 50 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ஆண்டி குழப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது நெருங்கிய உறவினரான 16 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாரிமுத்துவின் தகாத செயலால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், இந்த உண்மை வெளியாகி காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.
காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாரிமுத்து குற்றவாளி என்பதை கண்டுபிடித்த காவல்துறையினர் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் சிறுமியின் வயிற்றில் இருந்த சிசு தானாகவே இறந்து வெளியேறியதையடுத்து மாரிமுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் இந்த பரிசோதனையில் மாரிமுத்து குற்றவாளி என்பதை அறிவியல் ரீதியாக கண்டுபிடித்த போலீசார் இது சம்பந்தமாக புதுக்கோட்டை போக்ஸோ நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மூலமாக தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து இவ்வழக்கை முடித்த மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பை வாசித்த மகிளா நீதிமன்ற நீதிபதி கனகராஜ் மாரிமுத்து குற்றவாளி என அறிவித்தார் மேலும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மாரிமுத்துக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
மேலும் அபராதமாக 10,000 ரூபாய் விதிக்கப்பட்டது. சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதற்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியை மிரட்டியதாக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 2000 ரூபாயும் அபராதம் விதித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் யோகமலர், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிந்துநதி, நீதிமன்ற காவலர் செந்தமிழ் செல்வி ஆகியோருக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். இதை அடுத்து தண்டனை பெற்ற மாரிமுத்துவை திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
