திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இன்று நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த முகிலன், அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 7 பேர், பல்லடத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் காக்காபள்ளம் அருகே சென்றபோது, விஜயமங்கலத்திலிருந்து அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி, இவர்களது கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், கார் அப்பளம் போல் நொறுங்கியதில் முகிலன், ஈஸ்வரன், திருமகள், சிவகாமி மற்றும் சிறுவர்கள் ஸ்ரீநித்து, கனிஷ் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த ஹேமா என்ற பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைமறைவாகிவிட்ட நிலையில், ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version