பொன்னேரி அருகே இருவேறு கிராமங்களில் 2வீடுகளின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் திருடப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆசானபூதூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் குழந்தைகளின் கல்விக்காக குடும்பத்துடன் பொன்னேரியில் வசித்து வருகிறார். காலையில் தினந்தோறும் ஆசான பூதூர் கிராமத்திற்கு சென்று விவசாய பணிகளை முடித்துவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்பி விடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.
இன்று காலை இவரது வீடு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த 15000 ரொக்க பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதே போல அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வரும் சரண்யா என்பவர் தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகை, வெள்ளி மற்றும் பித்தளை பூஜை பொருட்கள், 5000ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இரு வேறு சம்பவங்கள் தொடர்பாக பொன்னேரி காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

