திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சில காலமாக ஆட்சியில் பங்கு என்று கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருவதோடு அதிக அளவிலான சீட்டுகளை வருகிற சட்டமன்ற தேர்தலில் வழங்க வேண்டும் என்றும் கூட்டணி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தின் இந்தியா கூட்டணியில் பூசல் பூதகரமாகியுள்ளதாக தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்பு திமுகவின் முக்கிய உறுப்பினரான கனிமொழியும் காங்கிரஸ் தேசிய தலைவரான ராகுல் காந்தியும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. அதில் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தேசிய தலைமை தெளிவாக கூறியதாகவும் மேலும் 30 தொகுதிகளை இம்முறை காங்கிரசுக்கு வழங்க திமுக உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதுமட்டுமின்றி காங்கிரஸ் தேசிய தலைமை நடத்திய கூட்டத்தில் கூட்டணி குறித்த விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் எனவும் காங்கிரஸ் எம்பிக்களுக்கு வலியுறுத்தியதாக செல்வப் பெருந்தகை பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இந்த பிரச்சனை ஓரளவுக்கு அடங்கியதாக சொல்லப்பட்டது.
தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமை வகித்து வந்த போதிலும் புதுச்சேரியில் காங்கிரஸ்தான் தலைமை வகித்து வந்துள்ளது. ஆனால் தற்போது நடந்து வரும் இருதரப்பு பூசல் காரணமாக யார் புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை வகிக்கப் போகிறார்கள் என்று கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த சூழலில் தமிழகத்தை போலவே திருச்சியிலும் திமுக ஆட்சியை நிறுவுவோம் என திமுகவின் மாநில தேர்தல் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் காங்கிரசை தவிர்த்து விட்டு இந்தியா கூட்டணியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தலைமை தொடங்கியதாகவும் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணிக்கு திமுகதான் தலைமை மதிக்க வேண்டும் எனவும் கூட்டணி கட்சிகள் விரும்புவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த சம்பவம் தான் காங்கிரஸிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
https://x.com/manickamtagore/status/2019635561338945812
இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது X பக்கத்தில் புதுச்சேரியில் திமுகவிற்கு 8% ஓட்டுகள் மட்டுமே உள்ளதாகவும், காங்கிரசுக்கு 26 சதவீதம் ஓட்டுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டு எட்டு சதவீதம் ஓட்டு வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா இல்லை 26 சதவீதம் ஓட்டு உள்ள கட்சி தலைமை தாங்குமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை ஏன் இழிவாக பேச வேண்டும் என குறிப்பிட்டு இருந்த அவர் இந்த நடைமுறையை தொடர்வது நல்லது அல்ல எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.
