திண்டுக்கல்லில் சட்ட விரோத குவாரிகள் அரசு அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா அல்லது வேறுவிதமாக நடக்கின்றனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை. ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அள்ளப்பட்டு வருகிறது.

இதனால் இந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் அரசின் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சட்டவிரோதமாக கனிமவள குவாரிகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்டவிரோத மணல் குவாரிகளை மூடி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்

இந்து வழக்கை கடந்த வாரம் விசாரணை செய்த நீதிபதிகள் சட்டவிரோத குவாரிகள் உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் குவாரி நடத்தியவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளம் நமது நாட்டின் சொத்து அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்க கூடாது, அதிகாரிகள் அதற்கு துணை போகக் கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட வாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் சட்டவிரோத குவாரிகள் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத குவாரி முன் பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு பின்பக்கமாக குவாரிகள் மணல் அள்ளப்பட்டு வருகிறது என்பதற்கான புகைப்படங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்தார். அப்பொழுது கோபமடைந்த நீதிபதிகள், இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா! அல்லது வேறுவிதமாக நடக்கின்றனவா? என கேள்வி எழுப்பினார்கள்.

அதிகாரிகளின் இவ்வாறான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி, உண்மைகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை வரும் 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version