பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செயல்படும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய குறுகிய காலத்தில் தங்கள் தலைமையில் ஆட்சி அமைய விரும்பியே மக்கள் வாக்களித்துள்ளனர்.

மத்திய அரசு வழக்கமாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய ஆட்சிக்கு தடையை ஏற்படுத்திய தருணத்தில், தவெக ஆட்சி அமைக்க இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவளிக்க முன் வந்ததால் விசிக போன்ற முற்போக்கான கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்திருப்பதின் மூலம் தமிழ்நாட்டின் ஜனநாயகம் வென்றுள்ளது.

தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கனவான பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்.

நாங்கள், எப்போதும் போல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தங்களது தலைமையிலான அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.

1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்திட வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை காரணம் காட்டி 23.08.2010க்கு முன்னதாகப் பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து (TET தேர்விலிருந்து விலக்களித்து) ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

தொடக்கக் கல்வித்துறையில் பணி புரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.243, நாள். 21.02.2023 மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் அரசாணை எண். 76, நாள். 30.09.2024 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய PPP & COE ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும். சாலைப்பணியர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version