விஜய்யின் அரசியல் வெற்றி குறித்தும், தன்னைச் சுற்றி பரவிய வதந்திகள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விஜய் முதல்வராவதை தடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்ததாக பரவிய வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். அதாவது, “தேர்தல் முடிவுகளுக்குப் பின் நான் மு.க.ஸ்டாலினை சந்தித்ததால் பல விமர்சனங்கள் வந்தன. அதற்கு நான் பதிலளிக்காமல் இருந்திருந்தால், அந்த வதந்திகள் உண்மையாகிவிடும். மு.க.ஸ்டாலின் எனது 40 ஆண்டு நண்பர். அரசியலுக்கு அப்பாற்பட்டது எங்களது நட்பு. தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோற்றது சங்கடம்தான் என்றார்.
நான் ஒன்றும் தரங்கெட்ட ஆள் கிடையாது. எனக்கும் விஜய்க்குமே 28 வயது வித்தியாசம் உள்ளது. நான் அரசியலிலேயே இல்லாதபோது விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? கமல் முதல்வராகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா எனத் தெரியவில்லை விஜய் வெற்றிபெற்றது எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் என்று ரஜினி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகையையும் அவரது பிரம்மாண்ட வெற்றியையும் மனதாரப் பாராட்டிய ரஜினிகாந்த், விஜய்க்கு அவரது 100% சினிமா புகழ் அரசியலில் கைக்கொடுத்துள்ளது. தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிய சமயத்தில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். மக்களுக்கு அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. விஜய் இந்தத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். இது மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரின் சாதனையை விடப் பெரிய வெற்றியாகும். நான் சம்பிரதாயத்துக்காக விஜய்யை சந்திக்க விருப்பமில்லை என்வும் தெரிவித்தார்,
“நான் வந்திருந்தால் 100% வென்றிருப்பேன்!”
தனது அரசியல் களம் குறித்துப் பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக 100% வென்றிருப்பேன். ஆனால், கிடைப்பது கிடைக்காமல் இருக்காது; கிடைக்காமல் இருப்பது கிடைக்காது” என்று தனது முத்துப் பட டயலாக்கை கூறி குறிப்பிட்டார். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனிப்பட்ட முறையில் விருப்பப்பட்டுக் கேட்டுக்கொண்டதால் மட்டுமே, அவரது பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்றதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு ரஜினிகாந்த் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் ஆலோசனையையும் வழங்கியுள்ளார். “தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாகச் செயல்பட வேண்டும். தொண்டர்கள் செய்யும் ஒரு சிறு தவறு கூட, நேரடியாக விஜய் என்ற தனிமனிதரையும் அவரது அரசியல் பாதையையும் பெரிதும் பாதிக்கும்.”
