இன்று தமிழ்த்தாயின் புதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்ததினம். நேற்று இசைத்தாயின் புதல்வர் இளையராஜாவின் பிறந்தநாள். எப்படி கலைஞர் என்றாலே கருணாநிதி என்றாகி விட்டதோ, அதே போல் இசைஞானி என்று கேட்டதும் நினைவுக்கு வருபவர் இளையராஜா.
ஆனால் இந்த இசைஞானிப் பட்டத்தை இளையராஜாவுக்கு வழங்கியவரே கலைஞர் கருணாநிதி
தான். காரைக்குடியில் நடைபெற்ற இளையராஜாவின் பாராட்டு விழாவில் பங்கேற்ற கலைஞர் கருணாநிதி, அந்த மேடையில் வைத்து அறிவித்ததுதான் இந்த இசைஞானி பட்டம்.
இது குறித்து ஆனந்த விகடன் இதழில் தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
இளையராஜாவுக்கு காரைக்குடியில் சிறப்பான முறையில் ஒரு பாராட்டு விழா நடத்துவதற்காக பழ.கருப்பையா முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அந்த விழாவுக்கு நான்தான் தலைமை வகித்தேன்.
விழாவில் பங்கேற்க காரைக்குடிக்கு நானும், பழ. கருப்பையாவும் சென்னையில் இருந்து காரில் பயணித்தோம்.
பயண வழியெங்கும் இளையராஜாவின் இசையை காரில் ரசித்தபடியே சென்ற எங்களுக்கு பயணக் களைப்பு அறவே தெரியாத அளவுக்கு எங்களை காருக்குள் கட்டிபோட்டு விட்டது இளையராஜாவின் இசைத்தென்றல்.
என்னைப் பொறுத்தவரையில், என்னுடைய நண்பரான மறைந்த பாவலர் வரதராசனின் தம்பி இளையராஜா என்பதை மட்டுமே அறிவேனே தவிர, அவருக்கும் எனக்கும் பழக்கம் எதுவும் இல்லை.
காரைக்குடி பாராட்டு விழாவில் இளையராஜாவின் இசை குறித்து பேசிய நான் இளையராஜாவை இனிமேல் இசைஞ்சானி என அழைக்க வேண்டும் என்று நிறைந்த மனத்துடன் சொன்னேன்.
அன்று நான் வழங்கிய சிறப்புப் பட்டம்,உலகத்தின் எந்த மூலை முடுக்குகளில் வாழும் தமிழர் எவருக்கும், இளையராஜா அன்று முதல் இசைஞானியாகவே ஆகிவிட்டார் என தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
