பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விசேஷ வாகனங்கள் சுவாமி மற்றும் அம்மாள் எழுந்தருளி மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 8ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 9ம் தேதி திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது.
இந்தநிலையில், புகழ்பெற்ற மதுரை அழகர்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 10ம் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து தங்கப்பல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் அமைக்கப்பட்டுள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
11ம் தேதி இரவு தல்லாகுளத்தில் விடியவிடிய நடைபெறும் எதிர்சேவையில் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்தநிலையில், 12ம் தேதி காலை பச்சைப் பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது, பக்தர்களின் கோவிந்தா, நாராயணா முழக்கம் விண்ணதிர்ந்தது. பக்தர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
வைகை ஆற்றில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வீரராகவ பெருமாள் கள்ளழகரை வரவேற்றார். இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். பின்னர் ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது.