தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக , சிபிஐ , சிபிஎம் , ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்தன. இதனால் பெரும்பான்மை பெற்ற தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அதன் படி இன்று தொடங்கியுள்ள தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ளார். இதனை தொடர்ந்து தீர்மானம் மீது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கெடுப்பு நடத்துகிறார். ஏன் ஆதரவு என்பதற்கான காரணத்தை உறுப்பினர்கள் தெரிவிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், காங்கிரஸ்(5), மார்க்சிஸ் கம்யூனிஸ் (2) விசிக(2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(2) உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ளனர். அந்தவரிசையில் நேற்று தவெக அரசுக்கு பாராட்டு தெரிவித்து பேசியதையடுத்து அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அமமுக சார்பில் போட்டியிட்டு வென்று பின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜ், முதலமைச்சர் விஜய்க்கு தனது ஆதரவை உருக்கமாகத் தெரிவித்தார். அப்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் “மாபெரும் சபைதனலில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்” என்ற பாடலைச் சுட்டிக்காட்டிய அவர், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளதாகப் புகழாரம் சூட்டினார்.
மேலும், விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கே நாட்களில் மாநிலத்தில் ரவுடிசம் குறைந்துள்ளதைக் காண முடிகிறது எனக் குறிப்பிட்ட காமராஜ், “தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றும் முதலமைச்சர் விஜய் என்னை மட்டும் கைவிட்டு விடுவாரா? அவர் எனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். தனது இந்த அரசியல் நிலைப்பாட்டைக் கண்டு “சிரிப்போர் சிரியுங்கள், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என அவர் ஆவேசமாகப் பேசிய நிலையில், தனிப்பட்ட முறையில் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என சபாநாயகர் அவருக்கு அறிவுறுத்தினார்.
