மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) அனுப்பிய சம்மனை ஏற்று, கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வரும் 17-ஆம் தேதி ஆஜராகப் போவதாக முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு கரூரில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க கோரி சிபிஐ அனுப்பிய நோட்டீஸ் குறித்துப் பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், தற்போது அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக, சிபிஐ அதிகாரிகள் நேரில் வழங்கிய சம்மனை செந்தில் பாலாஜி தரப்பினர் வாங்க மறுத்ததாகவும், அதன் பின்னரே அவருக்கு மின்னஞ்சல் (E-mail) வாயிலாக சம்மன் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இதுதொடர்பாக செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது செந்தில் பாலாஜியும் ஆஜராக உள்ளது அரசியல் களத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையின் மூலம் கரூர் சம்பவத்தில் நிலவும் மர்மங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
