முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பரப்புரையை மார்ச் 31 முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பரப்புரையை திருவாரூரில் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்குகிறார்.
https://x.com/arivalayam/status/2038150147578970321?
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். அதன்படி, மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை முதற்கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை அவர் மேற்கொள்கிறார். முதல் நாளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஊரான திருவாரூரில் இருந்து பரப்புரையை தொடங்குகிறார்.
இதற்கான சுற்றுப்பயணத்தின் அட்டவணையை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதே நாளில் மாலை 5 மணிக்கு கரூர் ராயனூரில் 4 தொகுதி வேட்பாளர்கள் ஆதரித்து உரையாற்றவுள்ளார்.
ஏப்ரல் 2-ம் தேதி காலை 9 மணிக்கு ஈரோடு சித்தோடு மற்றும் மாலை 5 மணிக்கு கோவை – கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
