முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், தற்போதைய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநருமான அருண் ஐபிஎஸ் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், சென்னை காவல் ஆணையராக இருந்தபோது அருண் ஐபிஎஸ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், குண்டர் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக அருண் ஐபிஎஸ் மீது சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கடுமையான கருத்துகளை பதிவு செய்திருந்த போதிலும், தமிழக அரசு அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உயர்நீதிமன்றத்தின் முந்தைய கருத்துகளின் அடிப்படையில் அருண் ஐபிஎஸ் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு பட்டியலிடக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. அந்த முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version