தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.
அண்மைக் காலமாக உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று (மார்ச் 23) அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால், உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்து விலை சரிவைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 வரை குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை தங்கம் விலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்றைய தினம் ரூ 2640 சரிந்தது, ரூ.1,08,960-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,03,600 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000-ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் சரிவு நடுத்தர வர்க்கத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.235க்கும் கிலோ வெள்ளி ரூ.15,000 குறைந்து ரூ.2,35,000க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து வருவது போன்ற காரணங்களே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையைச் சரிப்பது இதுவே முதல்முறை என்பதால், வரும் நாட்களில் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
