தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நடப்பாண்டில் மொத்தம் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 29-ம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்பப் பதிவு, நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து வழங்கப்பட்ட கால அவகாசத்துடன் சேர்த்து நேற்று (ஜூலை 23) மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதன் விபரப்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40,760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29,725 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
தற்போது பெறப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள சான்றிதழ்கள் மற்றும் விவரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய தேர்வு முகமையிடமிருந்து மாணவர்களின் அதிகாரப்பூர்வ நீட் மதிப்பெண் விவரங்களைப் பெற்ற பிறகு, தகுதியான மாணவர்களுக்கான இறுதித் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
