நெல்லையில் பட்டியலின விவசாயி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, விளிம்பு நில மக்களின் குரலாக தன்னை காட்டிக்கொள்ளும் திருமா, இதை பற்றி ஏன் திமுகவிடம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழக மக்களுக்கு வணக்கம். கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன்.
ஆனால், பொம்மை முதல்வராக இருந்த
மு.க.ஸ்டாலின் , அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை!
எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன்.
திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான்.
இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது,
குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது,
அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்!
ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது!
விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திரு. திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே?
இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி!
இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம்!
தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது!
நான் கேட்கப்போவது,
உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம்.
இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி.
தமிழகம் வாழ வேண்டும் என்றால்,
திமுக வீழ வேண்டும்!
செய்வீர்களா? என்று பதிவிட்டுள்ளார்.

