2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (பிப்ரவரி 23) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்தப் புதிய பட்டியலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆக உள்ளது.

இந்தச் சிறப்புத் திருத்தப் பணியின் போது, உயிரிழந்தவர்கள், ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பது மற்றும் குடிபெயர்ந்தவர்கள் எனச் சுமார் 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்டவர்கள் எனச் சுமார் 27.53 லட்சம் பேர் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, ஆண்களை விடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை மீண்டும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 2.89 கோடி பெண் வாக்காளர்களும், 2.77 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர். 7 ஆயிரத்து 617 மூன்றாம் பாலினத்தவரும் இருப்பதாகவும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 991 வாக்காளர்கள் இருப்பதாகவும், குறைந்தபட்சமாக ஒரு துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 896 பேர் இருப்பதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைத்தளமான https://elections.tn.gov.in பக்கத்தில் பார்க்கலாம் எனவும், 1.1.2026 அன்று 18வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் தங்களின் பெயரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம் எனவும் அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இப்போதும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version