தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவுக்குப் புதிய சட்டச் சிக்கல் உருவாகியுள்ளது. துறை சார்ந்த ஒப்பந்தங்கள் மற்றும் உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் ரூ.1000 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது அமைச்சர் நேரு தரப்புக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தன் மீதான வழக்குப் பதிவுக்குத் தடை கோரியும், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்து சட்டரீதியான நிவாரணம் தேடும் முயற்சியில் அமைச்சர் கே.என்.நேரு தரப்பினர் இறங்கினர்.

இந்த நிலையில், அமைச்சர் நேரு தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தங்களது தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தற்போது கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதிமுக தரப்பைச் சேர்ந்த இன்பதுரை சார்பிலும், அமலாக்கத்துறை சார்பிலும் தனித்தனியாக இந்தக் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அமைச்சர் நேருவுக்கு இந்த விவகாரத்தில் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.


Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version