கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஏழு வயது மகனை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவரது மனைவி பவித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் 7 வயது மகன் ஜஸ்வந்த்ராஜ் உடன் ஸ்டீபன் ராஜ் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை ஸ்டீபன் ராஜ் வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் எட்டிப்பார்த்தபோது, அவர் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வீட்டுக்குள் 7வயது சிறுவன் ஜஸ்வந்த்ராஜ் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும், ஸ்டீபன் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் இருப்பதை கண்டனர்.
இதையடுத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழு வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
