குற்றச்சாட்டுகள் காரணமாக மின்வாரியத் துறை அதிகாரிகள் இருவரை பணியிடை நீக்கம் செய்து எரிசக்தி வளத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சாட்டையை சுழற்றியிருக்கிறார்.
மாற்றத்தை எதிர்நோக்கி தவெகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய மக்களின் எண்ணங்களை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை தீவிரமாக செயலாக்கி வருகிறது. துறை ரீதியாக ஆலோசனைக் கூட்டங்களை முன்னெடுப்பதோடு இல்லாமல், முந்தைய ஆட்சியாளர்களிடம் இல்லாத வகையில் அரசு நிர்வாகத்தின் மீது சாட்டையை சுழற்றி அதனை வேகப்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
அவரது அமைச்சரவை சகாக்களும், முதலமைச்சரின் வழியிலேயே துடிப்புடன் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில், எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வெளிப்படை தன்மை இல்லாமல், அவசர கதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடப்பதற்கும், நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவரது அறிவுறுத்தலில்பேரில், முறையற்ற நிர்வாக தலையீடு மற்றும் இதர குற்றச்சாட்டுகள் காரணமாக தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரான (வருவாய்) வி. காசி , தலைமை பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) பி. சந்திரசேகரன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) பசுமை எரிசக்தி கழகம் எஸ். மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான முறையான விசாரனை நடைபெற்று மின்வாரிய விதிமுறைகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
