தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இன்று புதிதாக 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் நடிகர் ஸ்ரீநாத். விஜய்யின் நீண்டகால நெருங்கிய நண்பரான இவர், பள்ளிக் காலத்தில் இருந்தே விஜய்யுடன் இருந்து வருகிறார்.
விஜய் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஸ்ரீநாத் தவெக கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்ற ஸ்ரீநாத் அமைச்சராகவும் பதவியேற்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநாத், “ எனது தலைவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நாங்கள் அனைத்துத் தடைகளையும் உடைப்போம். நமது மக்கள் சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் நான் சரிசெய்து, அவர்கள் அமைதியான சமூக வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வேன். மீனவர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதையும் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இன்றி அவர்கள் தங்கள் வேலையை செய்வதையும் நாங்கள் உறுதி செய்வோம்.
முதல் நாளிலிருந்தே, எனது தலைவரிடமிருந்து ஒரு நண்பராக நான் நிறைய கற்று வருகிறேன். அவரோடு கல்லூரியில் பயணித்தேன், சினிமாத் துறையில் பயணித்தேன். இப்போது அரசியலில் பயணிக்கிறேன். இப்போது ஒரு அரசியல் வாதியாக அவரிடமிருந்து தினமும் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் எப்போதும் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். அவருடைய ஒழுக்கம், நேரந்தவறாமை, நேர்மை மற்றும் கருணை ஆகியவற்றை நான் எப்போதும் பின்பற்றுவேன். கடைசிவரை அவருடன் இருப்பேன்” என்றார்.
