தமிழகக் கோவில்களில் பின்பற்றப்படும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு என்ற பெயரில், 500 ரூபாய் வரை பணம் வசூலித்து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக, விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், புதுமண தம்பதிகள், பால்குடம் எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டோருக்கு இலவச சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்; பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் இந்த திராவிட தர்மம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுகக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
