தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், கட்சித் தலைவர் விஜய், எவ்வித நேர்காணலையும் நடத்தாமல், முதற்கட்டமாக 80 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வரும் பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் முடிவு விருப்ப மனு அளித்திருந்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முதற்கட்டப் பட்டியல் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ரகசியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாகத் தேர்தல் களத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முன்பு தலைமை நேரடியாகவோ அல்லது குழுக்கள் மூலமாகவோ நேர்காணல் நடத்தித் தகுதியானவர்களைத் தேர்வு செய்வது வழக்கம். ஆனால், தவெக-வில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் பட்டியல் தயாராகியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

நேர்காணல் நடத்தப்பட்டால் தங்களது திறமையையும், தொகுதியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் தலைமையிடம் நிரூபிக்கலாம் என்று நம்பியிருந்த பல நிர்வாகிகள் தற்போது அதிருப்தியில் உள்ளனர். மாவட்டச் செயலாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதோ என்ற அச்சம் அவர்களிடையே எழுந்துள்ளது. இதனால், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்ப மனு அளித்திருந்த நிர்வாகிகள் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இது வரும் நாட்களில் கட்சிக்குள் சில சவால்களை உருவாக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version