தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், விசிக உள்ளிட்ட மாநில கட்சிகளும் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை முன்வைத்தன

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திமுகவிற்கு விசுவாசமாக இருப்பார்கள், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப் பறக்கும் படையில் மத்திய அரசு ஊழியர்களைச் சேர்க்க வேண்டும். வாக்குச்சாவடி அபகரிப்பு மற்றும் கள்ள ஓட்டுகளைத் தடுக்க ரவுடிகளைக் கைது செய்ய வேண்டும்” என்றார்.

இதேபோல் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் பேசியதாவது, “திமுக அமைச்சர்கள் பணத்தை விநியோகம் செய்யப் பல இடங்களில் பதுக்கி வைத்துள்ளனர். பணப்பட்டுவாடாவைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் திமுகவிற்குச் சாதகமான அதிகாரிகளை மாற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.

சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேசுகையில், “திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களைத் தருகின்றனர், அதனைத் தடுக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியலில் பல லட்சம் பேர் விடுபட்டுள்ளனர், அவர்களை முறையாக இணைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் சார்பில் பங்கேற்ற தங்கபாலு, “ஒவ்வொரு நேரத்திலும் வாக்குச் சதவீதத்தில் மாறுபாடுகள் வரக்கூடாது. தகுதியான வாக்காளர்களை இன்னும் இணைக்காமல் இருப்பது குறித்து ஆணையரிடம் முறையிட்டோம்” என்றார்.

ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் வசீகரன், “பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்கவும், மாவட்டந்தோறும் புகார் அளிக்க வசதி செய்யவும் கோரிக்கை விடுத்தோம்” எனத் தெரிவித்தார்.

பெரும்பாலான கட்சிகள் முன்வைத்த பொதுவான கோரிக்கையாக, தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்பது இருந்தது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கும் 10 நாட்களுக்கு முன்பு வரை விடுபட்ட வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், வாக்குச்சாவடி அளவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைத் தேர்தல் முடிந்தவுடனேயே தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது. அரசியல் கட்சிகளின் இந்தக் கருத்துகளைக் கேட்டறிந்த தேர்தல் ஆணையம், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version