அதிமுக – பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த பலமான கூட்டணியை உருவாக்குவதற்காக பகீரதப்பிரயத்தனம் செய்து வருகிறது பாஜக.
அதன் ஒரு பகுதியாக, அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர பாஜக மட்டுமல்லாது பலரும் முயற்சி எடுத்தனர்; இன்னும் எடுத்து வருகின்றனர். இருந்த போதும் இவர்களை கட்சிக் குள்ளும் கூட்டணிக்குள்ளும் சேர்க்க முடியாது என்பதில் பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார்.
இந்தநிலையில், நேற்று பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். பின்னர், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்தப் பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டது. அதில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க எடப்பாடி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இருப்பினும், இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், “இபிஎஸ் உடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இ.பி.எஸ் இருக்கும் வரை அதிமுகவுடன் இணைப்பு இல்லை. எதிர்வரும் தேர்தலில் இபிஎஸ்க்கு சரியான பாடத்தை புகட்டுவோம். எடப்பாடி ஒழிக.. ஒழிக. ஒழிக..” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதாவது இதுநாள் வரை அதிமுகவில் ஓபிஎஸ் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வந்த ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ அதெல்லாம் மேல்மட்ட விஷயம். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார். இந்த கேள்விக்கு நான் இப்போது கருத்து சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள் ( ”Lets wait and see”)’ என்று பதிலளித்தார்.
முன்பெல்லாம் டிடிவி ஓபிஎஸ் பற்றி கேள்வி கேட்டால் ஒரு திடமான பதிலை சொல்வீர்கள், இப்போது அப்படி சொல்லவில்லையே என்ற கேள்விக்கு, ‘எப்போதுமே கடுமையாக விமர்சனம் செய்பவர்களை நானும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். என்னிடம் வாங்கி கட்டி கொள்ளாதவர்கள் யாருமே கிடையாது. அப்படி பார்த்தால் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது’ என்றார்.
