ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றஞ்சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேலும், வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு நவம்பர் 10ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கும் ஜாமீன் வழங்கக் கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும் நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் பொற்கொடிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், குற்றச்சாட்டு பதிவு தொடங்கியுள்ள நிலையில் பொற்கொடிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி ஜாமீன் வழங்கக் கோரிய மனு, ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு ஆகியவற்றோடு காவல்துறை தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறிய டிசம்பர் 3ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version