கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை புழல் உள்ளிட்ட தமிழகத்தின் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை  அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தத் தேர்வு மோசடி மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வரை சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்குத் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையைத் தொடங்கினர்.

இந்த மாநிலம் தழுவிய சோதனையின் ஒரு பகுதியாக, சென்னை புழலை அடுத்த புத்தகரம், சிவாஜி நகர் பகுதியில் வசித்து வரும் ரகுபதி என்பவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். 3 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை நடைபெறும் ரகுபதியின் வீட்டைச் சுற்றி, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை  வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது ரகுபதியின் வீட்டில் உள்ள முக்கிய சொத்து ஆவணங்கள், வங்கிப் கணக்கு விவரங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பான கோப்புகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். .

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version