தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை (டிச.17) பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-4 டிகிரியாக உயர்ந்துள்ளது. மற்ற இடங்களில் இயல்பை ஒட்டியே இருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மழை வாய்ப்பு

இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை (டிச.17) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல், 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 19 முதல் 21 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்றும், 22 ஆம் தேதி தழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை நாளை (டிச.17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை மீனவர்கள் மேற்குறிப்பட்ட கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version