சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் சிலர் நடிகரும், தவெக தலைவருமான விஜய்-யின் உருவம் பொறித்த கைக் குட்டையை காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்றும், நாளையும் கலைஞர் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றினார். கலாநிதி வீராசாமி எம்.பி.உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது மாணவர் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் திடீரென கைக் குட்டை எடுத்து மேடையை நோக்கி காண்பித்தனர். அதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்-யின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக கொடியின் நிறமும் இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கைக்குட்டை காட்டிய மாணவர்கள் இருவரிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடி 2 மாணவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.