கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிச் சென்று வர ஏதுவாக, இன்று (மே 21) முதல் மே 23-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 200 பேருந்துகள், நாளை (மே 22) 595 பேருந்துகள் மற்றும் மே 23 சனிக்கிழமை அன்று 650 பேருந்துகள் என மொத்தம் 1,445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இன்று முதல் மே 23 வரை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 120 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா மற்றும் பொன்னேரி மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்காக மாதவரத்தில் இருந்து 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை தவிர, வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுப் பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version