பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பசுக்கள் பொது இடங்களில் வெட்டப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சூர்ய பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘தமிழகத்தில் எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்றுகளை கொல்ல மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. எனவே, மே 28 பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளோ, மறு நாளோ மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பசுவோ அல்லது கன்றோ கொல்லப்படாமல் இருப்பதை தலைமைச் செயலாளரும் காவல் துறை தலைவரும் உறுதி செய்ய வேண்டும்’ என்று மே 27-ம் தேதி உத்தரவிட்டது.
மேலும், விலங்குகளைக் கொல்லுதல் என்பது அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜூலை 1-ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில், ‘விலங்குகளைக் கொல்லுதல் என்பது அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சரியாகக் குறிப்பிட்டிருந்தாலும், பக்ரீத் அல்லது வேறு எந்த நாளிலும் பசு அல்லது கன்றைக் கொல்லக் கூடாது என்றும் அது உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் முரண்பாடானவை. மேலும், மனுதாரரின் கோரிக்கைக்கும் மேலாகச் சென்று இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1958-ன் விதிகளுக்கு முரணானது. இந்த சட்டத்தின்படி, 10 வயதுக்கு மேற்பட்ட வேலைக்கோ, இனப்பெருக்கத்துக்கோ தகுதியற்ற பசுக்களை தகுந்த அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் பெற்று பிறகு கொல்ல அனுமதிக்கப்படுகிறது’ என வாதிடப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் கடைசி பத்தியில் திருத்தம் தேவைப்படுவதாகத் தோன்றுகிறது என தெரிவித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
